தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா ஓட்டப்பிடாரம் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 699 ல் 14 செம்மரங்களும், சர்வே எண்: 700 ல் 60 செம்மரங்களும், சர்வே எண்: 704/3 ல் 30 செம்மரங்களும், சர்வே எண்: 701/1 ல் 67 செம்மரங்களும், 711/1A ல் 24 செம்மரங்களும் என மேற்பட்ட நிலப்பரப்பில் சுமார் 195 செம்மரங்கள் உள்ளன. தற்போது இந்த நிலப்பரப்பானது Amazo solar farm LLP company எனும் பெயரில் உள்ளது.
ஓட்டப்பிடாரத்தில் உள்ள மொத்த 195 செம்மரங்களை மரம் ஒன்றுக்கு ₹20,000 வீதம் வெட்டி எடுத்திட சென்னையில் உள்ள தனியார் RMV International Traders நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் அவர்களால் கடந்த 10.12.2024 அன்று அனுமதியளிக்கபட்டு பின்னர் பல்வேறு விதிமீறல்கள், விவசாயிகளின் நில அளவை புகார் மனுக்கள் மற்றும் தவறான ஒப்பந்த ஆவணங்கள் அடிப்படையில் கடந்த 24.12.2024 அன்று செம்மரங்களை வெட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட செம்மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.
மேலும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள மொத்த செம்மரங்கள் எண்ணிக்கையானது 195 உள்ள நிலையில் அரசு ஆவண உத்தரவு மற்றும் தடை ஆவணங்களில் 190 மரங்கள் எனவும், அனுமதிக் கோராத தனியார் நிறுவனமான RMV International Traders நிறுவனத்திற்கு கடிதத்தின் மூலம் அனுமதி ஆவணங்கள் அளிக்கப்பட்ட முறையற்ற விதிமீறல்கள் மற்றும் நில விற்பனை, நில உரிமையாளர், செம்மரங்களை வெட்டும் நிறுவனம் எவ்வித சட்டவிதிமுறை விண்ணப்பங்கள் பெறப்படாமல் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலகம் தனது விதிமுறைகளை மீறி செயல்பட்டு உள்ளார்.
மேலும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள மொத்த 195 செம்மரங்களை RMV International Traders நிறுவனம், Amazo solar farm LLP நிறுவனம், ரவிச்சந்திரன், அதிமுக மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் தனக்கு என சொந்தம் கொண்டாடி வருவதோடு அத்தகைய 195 செம்மரங்களை சட்டவிரோதமான வகையில் சுமார் ₹ 3 கோடிக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பெற முயற்சித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
இத்தகைய சூழலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா ஓட்டப்பிடாரம் கிராமத்தில் உள்ள மேற்கண்ட நிலப்பரப்பில் உள்ள செம்மரங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் கள இயக்குநர் (வனத்துறை) அவர்கள் வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் தெரிவித்துள்ளார்.