கொல்லம் அருகே தண்டவாளத்தில் தொலைபேசி கம்பம் கிடந்த விவகாரத்தில் தூத்துக்குடி ரெயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் குண்டராவில் உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் ஒரு தொலைபேசி கம்பம் கிடந்தது. இதை அந்த பகுதி வழியாக சென்ற ஒருவர் பார்த்து ஏழுகோன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த தொலைபேசி கம்பத்தை அகற்றிவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து ரெயில்வே போலீசார் மீண்டும் அதே இடத்துக்கு வந்தபோது மேலும், ஒரு தொலைபேசி கம்பம் தண்டவாளத்தில் கிடந்தது. இதனையும் ரெயில்வே போலீசார் அங்கிருந்து அகற்றினர்.
அடுத்தடுத்து தொலைபேசி கம்பம் தண்டவாளத்தில் போடப்பட்ட சம்பவம் ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொலைபேசி கம்பம் கண்டெடுக்கப்பட்ட சமயத்தில் அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் கடந்து செல்ல இருந்தது. மேலும் இதுகுறித்து ஏழுகோன் போலீசாரும், கொல்லம் ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், போலீசார் செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தில் தொலைபேசி கம்பங்கள் வைக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்தில் அந்த பகுதியில் 2 செல்போன் எண்கள் இயங்கியது தெரியவந்தது. அந்த செல்போன் எண்கள் யாருடையது என விசாரணை நடத்தியபோது அந்த எண்கள் பெரும்புழையை சேர்ந்த அருண் (வயது 29), குண்டராவை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைபடுத்து இருவரையும் போலீசார் கண்டு பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொலைபேசி கம்பத்தை திருடியதாகவும் அதை விற்பனை செய்ய வசதியாக, துண்டு துண்டாக உடைப்பதற்காக தண்டவாளத்தில் போட்டதாகவும் கூறினர்.
இதனை ஏற்றுக் கொள்ளாத ரெயில்வே போலிசார் இருவர் மீதும் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.