விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் வேப்பலோடை, வி. கழுகாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய மைக்கேல் மகன் மணி (59) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுரேஷ் அவர்கள் நேற்று (18.02.2025) குற்றவாளியான மணி என்பவருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார் .
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் சமுத்திரக்கனி மற்றும் ஸ்டெல்லா மேரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.