ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூபாய் 60,000 அபராதம் விதித்து, இரவில் சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் அதிரடி.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளில் தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியாக சென்றது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்வதில்லை இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து நேற்று (19-02-2025 ) இரவு சுமார் 8 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோடு வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளையும் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு தனியார் பேருந்து மற்றும் 5 அரசு பேருந்துகள் என மொத்தம் 6 பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லை பகுதியான செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் வந்த அனைத்து பேருந்துகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 6 பேருந்துகளுக்கும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே நின்று செல்வதாக கூறினார். ஆனால் பேருந்துகளுக்கு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் நிறுத்தம் கிடையாது என்று கூறினர்.
ஆனால் பேருந்துகள் செல்ல அனுமதி கொடுப்பதே நாங்கள் தான். நாங்கள் எந்தப் பேருந்தையும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லவேண்டாம் என்று கூறவில்லை என்று ஆட்சியர் கூறினார்.
நீங்கள் தவறு செய்ததற்கு அபராதம் விதிப்போம் என்று ஆட்சியர் கூற அதற்கு நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் நிர்வாகம் கூறிய வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறோம் என்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.
அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்காக தானே பேருந்து ஓட்டுகிறீர்கள். அரசு போக்குவரத்து கழகமும் அதற்குத் தானே இயங்குகிறது. ஆனால் நீங்கள் பொதுமக்களை ஊருக்குள் சென்று ஏற்றாமல் இடையில் இறக்கி விட்டால் என்ன அர்த்தம். மேலும் சில ஓட்டுனர்களைப் பார்த்து நீங்கள் மக்களுக்காக பேருந்து ஓட்டவில்லை. ரேஸ்க்காக பேருந்து ஓட்டுகிறீர்களா.? என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுனர்களும் நடத்துனரும் திணறினர். சில பேருந்துகளை பார்த்த ஆட்சியர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலை இல்லை. பின் எப்படி பைபாஸ் ரைடர் என பெயரிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இதுபோல் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.