தன் கணவருடன் கள்ளக்காதலை கைவிட மறுத்த அக்காவை புடவையால் இறுக்கி கொன்ற தங்கை கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த 2 மகன்களும் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சோழத்திரம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(45). இவரது கணவர் அன்பழகன்(55). கடந்த 7 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். தனது 3 பிள்ளைகளோடு சங்கீதா தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது தங்கை சரிதா(40)வின் கணவர் மேகலைவனுக்கும் (52) கள்ளக்காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது கணவரை பலமுறை சரிதா கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிட கூறி அக்காவிடமும் பலமுறை கூறியுள்ளார். இருவரும் அதை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரிதா, அங்கு போவியா என கூறி தனது கணவரின் காலை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேகலைவனை, சங்கீதா அடிக்கடி சந்தித்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சரிதா தனது 17 மற்றும் 18 வயதுடைய மகன்களை அழைத்து கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு சங்கீதா வீட்டிற்கு சென்றார். விட்டு வெளியே வா என கூச்சல் போட்டுள்ளார். இதனால் பயந்து போன சங்கீதா, வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். ஆத்திரமடைந்த சரிதா மற்றும் அவரது மகன்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சங்கீதாவை தாக்கினர்.
மேலும், புடவையை எடுத்து அவரது கழுத்தில் சுற்றி சரிதா இறுக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த சங்கீதாவை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து, சரிதா மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்தனர்